சினிமா
பாரதிராஜா, இளையராஜா

‘ஆத்தா’வை கைவிட்டார் பாரதிராஜா

Published On 2021-01-03 11:12 GMT   |   Update On 2021-01-03 11:12 GMT
பாராதிராஜா - இளையராஜா கூட்டணியில் உருவாக இருந்த ‘ஆத்தா’ படம் கைவிடப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் வெற்றிக் கூட்டணியாக திகழ்ந்த பாராதிராஜா - இளையராஜா கூட்டணி, கடைசியாக 28 ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘நாடோடி தென்றல்’ படத்தில் இணைந்து பணியாற்றினர். இதையடுத்து இவர்கள் ‘ஆத்தா’ படம் மூலம் மீண்டும் இணைவதாக இருந்தது. சில மாதங்களுக்கு முன் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் தயாரிப்பு வேலைகள் தடைபட்டிருந்தன.

இந்நிலையில், இப்படம் தற்போது கைவிடப்பட்டுள்ளதாக இயக்குனர் பாரதிராஜா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என் இனிய தமிழ் மக்களே, 15 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட வேண்டிய கதை ஆத்தா. முன்பே இந்த கதையை படமாக்கி இருந்தால், உங்கள் பாரதிராஜாவை கண்டிருக்கலாம். காலசூழ்நிலை ஒன்று உள்ளது. நடைமுறை நவீன முற்போக்கான இந்த கால கட்டத்தில் வந்த பல சினிமாக்களின் கருவை நாடியுள்ளது ஆத்தா.



இதை மீண்டும் கையில் எடுத்தால் பொருள் ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் பெரும் நட்டம் ஏற்படும் என்ற காரணத்தினால், ஆத்தா கைவிடப்படுகின்றன. புதிய அறிவிப்பு, புதிய தலைப்புடனும் புதிய தொழில்நுட்ப கூட்டணியுடன், மிக விரைவில் அறிவிக்கப்படும்”
என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது 
Tags:    

Similar News