சினிமா
குதிரையேற்ற வீராங்கனை பட்டம் பெற்ற திரிஷா
சாகசங்கள் செய்வதில் ஆர்வம் கொண்ட நடிகை திரிஷா, தற்போது இரண்டே மாதத்தில் குதிரையேற்ற பயிற்சியை முடித்து சான்றிதழ் பெற்றுள்ளார்.
ஸ்கை டைவிங் என்ற பெயரில் வானத்தில் இருந்து குதிப்பது, ஸ்கூபா டைவிங் எனப்படும் ஆழ்கடலில் நீச்சல் அடிப்பது, மலை ஏற்றம் செல்வது என சாகசங்கள் செய்வதில் ஆர்வம் கொண்டவர் நடிகை திரிஷா. இவர் தற்போது செய்துள்ள சாகசம் என்னவென்றால், இரண்டே மாதத்தில் குதிரையேற்ற வீராங்கனை ஆனது தான்.
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் பொன்னியன் செல்வன் படத்தில் நடிக்கும் திரிஷா, இந்த படத்திற்காக குதிரையேற்ற பயிற்சி செய்ய வேண்டி இருந்தது. இதற்கு ஒரு வார பயிற்சி போதுமானது தான். ஆனால் திரிஷாவோ கொரோனா லாக்டவுன் காலத்தை பயன்படுத்தி குதிரையேற்ற பயிற்சியை முறையாக பயின்று அதற்கான சான்றிதழும் பெற்று அசத்தியுள்ளார்.
குதிரையேற்ற பயிற்சி பள்ளியில் படித்த அவர், தற்போது ஆரம்பக்கட்ட குதிரையேற்ற வீராங்கனை என்ற பட்டத்தை பெற்றுள்ளார். இதில் இன்னும் இரண்டு நிலைகளை அவர் முடித்தால் குதிரை பந்தையங்களில் கூட கலந்து கொள்ளும் தகுதி அவருக்கு வந்துவிடுமாம். திரிஷாவின் இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.