சினிமா
ஐஸ்வர்யா ராஜேஷ்

படக்குழுவில் ஒருவருக்கு கொரோனா.... ஐஸ்வர்யா ராஜேஷ் படப்பிடிப்பு நிறுத்தம்

Published On 2020-10-19 06:06 GMT   |   Update On 2020-10-19 06:06 GMT
படப்பிடிப்பில் கலந்து கொண்டவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதால் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கை தளர்த்தி சினிமா மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகளை குறைந்த எண்ணிக்கையில் ஆட்களை வைத்து நடத்திக்கொள்ள அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி படப்பிடிப்புகள் தொடங்கி உள்ளன. இந்த படப்பிடிப்புகளிலும் கொரோனா பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தெலுங்கில் ஐஸ்வர்யா ராஜேஷ், நானி, ரிதுவர்மா ஆகியோர் நடிக்கும் டக் ஜெகதீஷ் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வந்தது. 

இந்த படக்குழுவை சேர்ந்த ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் வீட்டில் தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 



அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது. இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பாஹர்வாடி என்ற இந்தி டி.வி. தொடர் படப்பிடிப்பில் பங்கேற்ற ஒருவர் கொரோனா தொற்றில் பலியாகி உள்ளார். மேலும் படப்பிடிப்பில் பங்கேற்ற 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News