சினிமா
விஜய் தேவரகொண்டா

எல்லோருக்கும் ஓட்டுரிமை வழங்கக் கூடாது - விஜய் தேவரகொண்டாவின் கருத்தால் சர்ச்சை

Published On 2020-10-12 11:39 IST   |   Update On 2020-10-12 11:39:00 IST
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தேவரகொண்டா, எல்லோருக்கும் ஓட்டுரிமை வழங்கக் கூடாது எனக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழில் நோட்டா படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள விஜய்தேவர கொண்டா தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று அவர் பேசியதாவது: “நமது அரசியல் அமைப்பு சரியாக இல்லை. எல்லோருக்கும் ஓட்டுரிமை அளிப்பதும் சரியல்ல. விமானத்தில் மும்பைக்கு செல்வதாக இருந்தால் அந்த விமானத்தை யார் ஓட்டுவது என்று விமானத்தில் பயணம் செய்யும் 300 பயணிகள் ஓட்டுபோட்டு தேர்வு செய்வது இல்லை. தகுதியான விமானியை விமான நிறுவனமே அனுப்புகிறது.

ஆனால் அரசியலில் யார் பொறுப்புக்கு வரவேண்டும் என்பதை மக்கள் ஓட்டுபோட்டு தேர்வு செய்கிறார்கள். அரசியல்வாதிகள் ஓட்டுகளை பணம் கொடுத்தும், சாராயம் கொடுத்தும் வாங்கி விடுகின்றனர். பணம் இருப்பவர்களுக்கு ஓட்டுரிமை தேவை இல்லை. நடுத்தர மக்களுக்கு, படித்தவர்களுக்கு பணத்துக்கு விலை போகாதவர்களுக்கு மட்டும் ஓட்டுரிமை வழங்க வேண்டும். நிறைய பேர் யாருக்கு ஓட்டு போடுகிறோம் என்பது தெரியாமலே போடுகிறார்கள். 



எனவே எல்லோருக்கும் ஓட்டுரிமை வழங்கக் கூடாது. நமது சமூகத்தில் மாற்றம் வரவேண்டுமானால் சர்வாதிகார ஆட்சி இருக்க வேண்டும். அந்த சர்வாதிகாரி நல்லவராக இருக்க வேண்டும்.” இவ்வாறு கூறியுள்ளார். இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. விஜய் தேவரகொண்டாவுக்கு எதிராக வலைத்தளத்தில் பலரும் கண்டன பதிவுகள் வெளியிடுகின்றனர்.

Similar News