சினிமா
நயன்தாரா

நெஞ்சம் பதறுகிறது... நம்ப மறுக்கிறது... நயன்தாரா அறிக்கை

Published On 2020-09-26 13:04 GMT   |   Update On 2020-09-26 13:04 GMT
பாடகர் எஸ்பிபி மறைவிற்கு முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா நெஞ்சம் பதறுகிறது... நம்ப மறுக்கிறது... என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நேற்று மரணம் அடைந்தார். இன்று மதியம் எஸ்பிபி-யின் உடல் அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது நடிகை நயன்தாரா எஸ்.பி.பிக்காக உருக்கமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், ''தெய்வீகக் குரல் இனி இல்லை என்பதை நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது. தலைமுறைகளை தாண்டி நம்மை மகிழ்வித்த திரு எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாருடைய குரல், நம்முடைய எல்லா காலங்களுக்கும், காரணங்களுக்கும் பொருந்தி இருக்கும்.



நீங்கள் இனி இல்லை என்பதை மனம் நம்ப மறுக்கிறது. ஆயினும் உங்கள் குரல் என்றென்றும் நீங்கா புகழுடன் இருக்கும். உங்களுக்கு அஞ்சலி செலுத்தி, எங்களுக்கு நாங்களே ஆறுதல் சொல்லிக் கொள்ளும் இந்த நேரத்தில் கூட உங்கள் பாடல் மட்டுமே பொருந்துகிறது. எங்கள் வாழ்வில் உங்களின் ஆளுமை அப்படி. நீண்ட காலமாக இடைவிடாமல் உழைத்து எங்களை மகிழ்வித்த உங்களுக்கு மனம் இல்லாமல் பிரியா விடை கொடுக்கிறோம். பாடும் நிலா விண்ணிலிருந்து பாடட்டும். உங்களை பிரிந்து வாடும் உங்கள் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் உங்கள் திரை உலக சகாக்களுக்கும், உலகெங்கும் பரவி இருக்கும் உங்கள் எண்ணற்ற ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த ஆறுதல் செய்தி இது.'' இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News