சினிமா
பிறந்தநாளன்று 2 கிராமங்களை தத்தெடுத்த பிரபல நடிகை.... ஏன் தெரியுமா?
பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தனது பிறந்த நாளையொட்டி மராட்டியத்தில் உள்ள 2 கிராமங்களை தத்தெடுத்து உள்ளார்.
கொரோனா பரவலால் வேலையிழந்து தவிப்பவர்களுக்கும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் நடிகர், நடிகைகள் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தனது பிறந்த நாளையொட்டி மராட்டிய மாநிலத்தில் உள்ள பதார்தி, சக்கூர் ஆகிய 2 கிராமங்களை தத்தெடுத்து இருப்பதாக அறிவித்துள்ளார். இலங்கை நடிகையான ஜாக்குலின் பாலிவுட்டில் அதிக படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கில் வெளியான சாஹோ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடினார்.
கிராமங்களை தத்தெடுத்தது குறித்து ஜாக்குலின் பெர்னாண்டஸ் கூறியதாவது: “ கொரோனா தொற்றினால் ஏராளமான மக்கள் பாதித்துள்ளனர். இது அனைவருக்கும் கடினமான காலம். பலர் அடிப்படை தேவைகளுக்கே போராடுகிறார்கள். மக்களுக்கு நம்மால் ஏதேனும் உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் 2 கிராமங்களை தத்தெடுத்து உள்ளேன்” என்றார். இந்த கிராமங்களில் வசிப்பவர்களுக்கு ஊட்டச்சத்து உணவுகள் வழங்குதல், வேலை வாய்ப்பு பயிற்சி, ம்ருத்துவ சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல பணிகளை ஜாக்குலின் செய்ய உள்ளாராம்.