சினிமா
ஆதரவற்ற சிறுமியின் கல்விச் செலவை முழுமையாக ஏற்ற சூர்யா ரசிகர்கள்
நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ஆதரவற்ற சிறுமியின் கல்விச் செலவை முழுமையாக ஏற்றுக் கொள்வதாக ரசிகர்கள் கடிதம் கொடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியைச் சேர்ந்த சாகுல் அமீது மற்றும் அவரது மகன் முகமது சாலிக். கடந்த சில தினங்களுக்கு முன்பு எதிர்பாராதவிதமாக இருவரும் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். இதையடுத்து அவரது ஐந்து வயது மகள் முஸ்பனா சாலிகா கல்வி பயில முடியாத சூழ்நிலை இருந்து வந்தது.
இதை அறிந்த புதுக்கோட்டை மாவட்ட சூர்யா நற்பணி இயக்கத்தை சேர்ந்தவர்கள், நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட சூர்யா நற்பணி இயக்கத்தின் மாவட்ட தலைவர் முகமது இப்ராஹிம் உள்ளிட்ட நிர்வாகிகள் சாகுல் அமீது இல்லத்திற்குச் சென்றனர். அங்கு அவரது மகள் முஸ்பனா சாலிஹாவின் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பள்ளிப் படிப்புக்கான முழு கல்வி கட்டணத்தையும் சூர்யா நற்பணி இயக்கம் ஏற்று கொள்ளும் என்று கல்வி உதவிக்கான உறுதி கடிதத்தையும் முதற்கட்ட கல்வி தொகையையும் சாகுல் அமீதின் மனைவியிடம் வழங்கினர்.
நடிகர்களின் பிறந்தநாள் என்றால் பேனர் வைப்பது, பட்டாசு வெடிப்பது, பாலபிஷேகம் செய்வது என்று இல்லாமல் அதனை மாற்றி ஆதரவற்ற குழந்தைக்கு பள்ளி கல்விக்கான முழு தொகையையும் ஏற்று மற்றவர்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்து உள்ள நடிகர் சூர்யா நற்பணி இயக்கத்தினரின் செயலை பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டி வருகிறார்கள்.