சினிமா
நடிகை ரோஜா ஆம்புலன்ஸ் ஓட்டிய போது எடுக்கப்பட்ட புகைப்படம்

ஆம்புலன்ஸ் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய நடிகை ரோஜா

Published On 2020-07-09 11:59 IST   |   Update On 2020-07-09 11:59:00 IST
நடிகையும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரோஜா, ஆம்புலன்ஸ் ஓட்டி சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
தமிழ் திரையுலகில் செம்பருத்தி படத்தில் அறிமுகமாகி 1990-களில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் ரோஜா. சூரியன், உழைப்பாளி, அதிரடி படை, வீரா, ஆயுத பூஜை, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். டைரக்டர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் ஆந்திர அரசியலில் குதித்தார். 

தற்போது ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். ஆந்திராவில் அனைத்து மருத்துவ வசதிகளுடன் 108 ஆம்புலன்ஸ் சேவையை மாநில முதல்- மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி உள்ளார். நகரி தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களுக்கான ஆம்புலன்ஸ்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சி புத்தூரில் நடந்தது. இதில் நடிகை ரோஜா பங்கேற்றார். 

அப்போது திடீரென்று ஆம்புலன்சில் ஏறி இருக்கையில் உட்கார்ந்து ஆம்புலன்சை ஓட்ட தொடங்கினார். நகரி வரை 20 கிலோ மீட்டர் தூரம் ஆம்புலன்சை ஓட்டி சென்றார். ரோஜாவின் இந்த செயலை விமர்சித்த தெலுங்கு தேசம் கட்சி “ரோஜா சாகசம் செய்வதற்காக ஆம்புலன்சை ஓட்டி உள்ளார். அவசர கால ஊர்தியை ஓட்ட அவருக்கு லைசென்ஸ் உள்ளதா?” என்று கேள்வி எழுப்பி உள்ளது.

Similar News