சினிமா
ஜி.வி.பிரகாஷ், நிவேதா பெத்துராஜ், ராஷிகன்னா, கமல்ஹாசன், வெற்றிமாறன்

மனசாட்சியோடு சாட்சி சொன்ன ரேவதி- திரையுலக பிரபலங்கள் பாராட்டு

Published On 2020-07-02 06:10 GMT   |   Update On 2020-07-02 06:10 GMT
சாத்தான்குளம் வழக்கில் மாஜிஸ்திரேட்டிடம் துணிச்சலுடன் சாட்சியம் அளித்த பெண் தலைமை காவலர் ரேவதியை திரைப்பிரபலங்கள் பாராட்டி உள்ளனர்.
சாத்தான் குளம் போலீஸ் நிலையத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை விடிய விடிய அடுத்து துன்புறுத்தியதாக மாஜிஸ்திரேட்டிடம் சாட்சியம் அளித்த பெண் தலைமை காவலர் ரேவதியை பாராட்டி இணைய தளத்தில் ஹேஷ்டேக்கை உருவாக்கி உள்ளனர். அதில் பலரும் ரேவதியை வாழ்த்தி பதிவுகள் வெளியிடுகின்றனர்.

நடிகர் கமல்ஹாசன் தனது வலைத்தள பக்கத்தில், “சாத்தான்குளம் இரட்டை கொலையில் நீதியை நிலைநாட்ட போராடிகொண்டிருக்கும் மாஜிஸ்திரேட் பாரதிதாசனுக்கும் அவருக்கு உறுதுணையாக நிற்கும் மதுரை உயர்நீதி மன்றத்திற்கும் மனசாட்சியோடு சாட்சி சொன்ன காவலர் ரேவதிக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.

நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட பதிவில், “நீதி வென்றிட யாருக்கும் அஞ்சிடாத நெஞ்ச துணிவோடு உண்மையை உறுதியாக எடுத்து சொன்ன தலைமை காவலர் ரேவதி அவர்களுக்கு தலை வணங்குகிறேன். உங்களோடு தேசம் துணை நிற்கிறது” என்று கூறியுள்ளார்.

இயக்குனர் வெற்றிமாறன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி, மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன், துணிச்சல் மிகுந்த ரேவதி, நீங்கள் எங்களுக்கு நம்பிக்கை அளித்து இருக்கிறீர்கள். உங்களுக்கு நாங்கள் துணையாக இருப்போம்“ என்று குறிப்பிட்டு உள்ளார்.

நடிகை ராஷிகன்னா வெளியிட்டுள்ள பதிவில், “உங்கள் தைரியமும் துணிச்சலும் இன்னும் நீதியின் மீது எங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. உண்மையை வெளிப்படுத்திய ரேவதிக்கு நன்றி. உங்களை நினைத்து எங்களுக்கு பெருமையாக உள்ளது” என்று கூறியுள்ளார்.

நடிகை நிவேதா பெத்துராஜ் வலைத்தளத்தில், “ரேவதிக்கு வாழ்த்துக்கள், இந்த தேசம் உங்கள் பின்னால் நிற்கிறது” என்று கூறியுள்ளார்.
Tags:    

Similar News