சினிமா
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விக்ரமின் அடுத்த படம் இந்தியில் டப்பிங் செய்து வெளியிடப்பட உள்ளது.
விக்ரம் நடித்து கடந்த வருடம் கடாரம் கொண்டான் படம் வெளியானது. தற்போது கோப்ரா, துருவ நட்சத்திரம், மகாவீர் கர்ணா, பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் கைவசம் உள்ளன. கவுதம் மேனன் இயக்கும் துருவ நட்சத்திரம் பட வேலைகளில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு கொரோனாவால் நிறுத்தப்பட்டு உள்ளது.
கோப்ரா பட வேலைகள் இறுதிகட்டத்தில் உள்ளன. இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்குகிறார். கதாநாயகிகளாக ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ் ஆகியோர் நடிக்கின்றனர். இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஜான் விஜய் ஆகியோரும் உள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். லலித் குமார் தயாரித்துள்ளார். கோப்ரா படத்துக்காக விக்ரம் முழுமையாக தனது தோற்றத்தை மாற்றி உள்ளார். இதில் 15 தோற்றங்களில் அவர் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. படத்தில் சில காட்சிகள் மட்டுமே பாக்கி உள்ளது. அதை ரஷ்யாவில் படமாக்க வேண்டும்.
தற்போதுள்ள சூழ்நிலையில் அங்கு படபிடிப்பை நடத்துவது சிரமம் என்பதால் ஊரடங்கு முடிந்ததும் சென்னையிலேயே அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர். கோப்ரா படத்தை இந்தியில் டப்பிங் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே மணிரத்னத்தின் ராவண் மற்றும் டேவிட் இந்தி படங்களில் விக்ரம் நடித்துள்ளார். இப்போது கோப்ராவும் இந்திக்கு போகிறது.