சினிமா
புருஷோத்தமன், இளையராஜா

"என் குடும்பத்தைவிட அவருடன்தான் அதிகம் இருந்தேன்" - புருஷோத்தமன் குறித்து இளையராஜா உருக்கம்

Published On 2020-05-25 04:49 GMT   |   Update On 2020-05-25 04:49 GMT
தனது இசைக்குழுவில் பணியாற்றிய டிரம்மர் புருஷோத்தமன் மறைவுக்கு இசையமைப்பாளா் இளையராஜா இரங்கல் தெரிவித்துள்ளாா்.
இசையமைப்பாளா் இளையராஜாவின் நெருங்கிய நண்பரும், அவரிடம் நீண்ட காலமாக பணியாற்றியவருமான, புருஷோத்தமன் கடந்த சில தினங்களுக்கு முன் மரணமடைந்தார். 

புருஷோத்தமனின் மறைவு தொடர்பாக, இளையராஜா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: என்னுடைய வாழ்நாளிலேயே என்னுடைய அருகிலேயே அதிக நாள், அதிக நேரம் இருந்தவா் புருஷோத்தமன். எங்களுடைய குடும்பத்தாரிடம் நாங்கள் இருந்ததைவிட, நாங்கள் இருவரும் ஒன்றாக இருந்த நேரம்தான் அதிகம். ஒவ்வொரு நாளும் எங்களுக்கு இசையிலேயே கழியும்.


என்னுடைய வாழ்நாளில் எனது குடும்பத்தாருடன் கூட நான் அவ்வளவு நேரம் இருந்தது கிடையாது. வீட்டில் ஒரு முறை மனைவியை அழைப்பதற்கு பதிலாக புரு என்று அழைத்துவிட்டேன். அவ்வளவு தூரம் எனக்கு நெருக்கமானவர் புருஷோத்தமன், அவர் காலமானது  மிகவும் வருத்தத்தை அளித்துள்ளது. அவா் இன்று நம்மிடையே இல்லை. 

இந்த நிகழ்வை இவ்வளவு விரைவாக நான் எதிர்பார்க்கவில்லை. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என அந்த வீடியோ பதிவில் இளையராஜா தெரிவித்துள்ளாா்.
Tags:    

Similar News