சினிமா
பா.இரஞ்சித்

கொரோனாவை விட கொடிய நோய் கோரத்தாண்டவத்தை நிகழ்த்துகிறது - பா.இரஞ்சித்

Published On 2020-05-11 12:17 GMT   |   Update On 2020-05-11 12:17 GMT
கொரோனாவை விட கொடிய நோய் கோரத்தாண்டவத்தை நிகழ்த்துகிறது என்று இயக்குனர் பா.இரஞ்சித் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இயக்குனர் பா.இரஞ்சித் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

உலகெங்கிலும் கொரோனா பெரும் கொடூரத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கும் வேளையில், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பற்றிய கேலிப்பேச்சுக்களை பரப்பி கிண்டலடித்துக் கொண்டிருந்தோம்.

நிலைமையின் தீவிரத்தை தாமதமாகவே உணர்ந்து கொண்டாலும், தடுப்பு நடவடிக்கையாக அரசு அறிவித்த பொது ஊரடங்கிற்குப் பிறகு தான் கொஞ்சம் கொஞ்சமாக இந்நோய் பற்றிய பீதிக்குள் நாம் நுழைந்தோம். அந்த பீதி இன்று வரை தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.

பல்வேறு இடர்பாடுகளை தாங்கி நாம் அனைவருமே கொரோனாவிற்கு எதிராக ஒருங்கிணைந்து போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த
நோய்தொற்றினால் நாம் இறந்துவிடுவோமோ என்கிற அச்சத்தை போக்குவதற்காக நமக்கு, "நோயுடனே வாழ பழகிக்கொள்வோம்" என்று அரசு தரப்பு இப்போது நழுவுவதையும் காண முடிகிறது.

இந்த கொரோனா பேரிடரால் உலகமும், இந்தியாவும் என்னவெல்லாம் மாற்றங்களை சந்திக்கப் போகிறது என்று பொருளாதார வல்லுனர்கள் முதல் சாமானிய மக்கள் வரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.  இந்த ஊரடங்கு காலத்தில் பெரும்பாலான குற்ற நடவடிக்கைகள் குறைந்திருப்பதும், மனிதநேய தன்மையின் பொருட்டு சக மனிதனுக்கான உதவிகள் பெருகியதும் பாராட்டுக்குரியவைகள். ஆனால் வழக்கம் போல நம் தமிழகத்தில் கொரோனாவை விட கொடிய நோயான சாதிவெறி அதே உயிர்ப்புடன் தன் கோரத்தாண்டவத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றது.

இந்த கொரோனா காலத்தில் நமக்குத் தெரிந்து தமிழகத்தில் மட்டும் கிட்டதட்ட முப்பதுக்கும் மேற்பட்ட பல்வேறு விதமான சாதி வன்கொடுமை தாக்குதல்கள் தலித் மக்களின் மேல் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இச்சம்பவங்கள் யாவும், எத்தனை பேரிடர் வந்தாலும் இந்த மனிதர்கள் மனதில் தேக்கி வைத்திருக்கிற சாதிவெறி வன்மத்தை மட்டும் விட்டொழிக்க மாட்டார்கள் என்ற வலிதரும் உண்மையை மிக தீர்க்கமாக உணர்ந்துகொள்ள முடிகிறது.

சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம்  டி. கோணாகாபாடி ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி.அம்சவள்ளியை சாதியின் பெயரால் பணி செய்யவிடாமல் தடுத்து அவர் மீது சாதிய வன்மத்தை காட்டிய சாதிவெறிக்கும்பல் தொடங்கி நேற்றிரவு தூத்துக்குடி அருகே நிகழ்த்தப்பட்ட இரட்டைக்கொலை வரை நம் தமிழ் மக்கள் சாதிவன்மம் முற்றிப்போய் சக மனிதனாகிய, சகோதரனாகியவர்கள் மீது  எவ்வித அச்சமுமின்றி சாதி வன்கொடுமைகளை இந்த நெருக்கடியான காலத்திலும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

உலகமே துவண்டு கிடக்கக் கூடிய இப்படியான நெருக்கடி காலத்திலும் கூட, அன்றாடம் தாக்குதலை எதிர்கொண்டிருக்கிற ஒவ்வொரு தலித்துக்கும் பின்னால் இருக்கிற வலியையும், வேதனையையும் இப்போதாவது நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். கடக்க முடியாத பொழுதுகளுடன்...

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News