சினிமா
போனி கபூர், அஜித்

வலிமை அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்கள் - அறிக்கை வெளியிட்டு ஷாக் கொடுத்த போனி கபூர்

Published On 2020-04-30 06:50 GMT   |   Update On 2020-04-30 06:50 GMT
வலிமை படத்தின் அப்டேட்டுக்காக காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு, அறிக்கை வெளியிட்டு தயாரிப்பாளர் போனி கபூர் ஷாக் கொடுத்துள்ளார்.
நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ‘வலிமை’ என்று பெயரிட்டுள்ளனர். போனிகபூர் தயாரிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகும் இதில், அஜித்குமார் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸ் காட்சிகளும் இப்படத்தில் இடம்பெறுகின்றன. தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் படத்தின் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது.
இதுவரை வலிமை படம் குறித்த எந்தவித அப்டேட்டும் வெளியாகவில்லை. இதனிடையே நடிகர் அஜித்தின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி வலிமை படக்குழு ஏதேனும் அப்டேட்டை வெளியிடும் என அஜித் ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: "கோவிட் 19 என்னும் கொரோனா என்கிற கொடிய நோயின் தாக்கத்தில், அகில உலகமே போராடிக் கொண்டு இருக்கும் இந்த தருணத்தில் எங்கள் நிறுவனம் தயாரிக்கும் எந்த படத்துக்கும் எந்த விதமான விளம்பரமும் செய்ய வேண்டாம் என்று எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் ஆகியோரை கலந்து ஆலோசித்து, ஒருமித்தக் கருத்தோடு முடிவெடுத்து உள்ளோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம். அதுவரை தனித்து இருப்போம், நம் நலம் காப்போம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

போனி கபூரின் இந்த அறிக்கை அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. 
Tags:    

Similar News