சினிமா
அந்த படத்துக்காக தூங்காம வேலை செஞ்சேன் - ஜிவி பிரகாஷ்
யூடியூபில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய ஜிவி பிரகாஷ், தூங்காமல் வேலை செய்தும் அப்போ பாராட்டு கிடைக்கல என கூறியுள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்திய முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். சினிமா படப்பிடிப்புகளும் செய்யப்பட்டதால் திரைப்பிரபலங்கள் வீட்டில் இருந்தபடியே சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்கள் உரையாடி வருகின்றனர். அந்த வகையில், இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் யூடியூபில் ரசிகர்களுடன் உரையாடி, அவர்கள் விரும்பி கேட்ட பாடல்களை பாடி அசத்தினார்.
அப்போது அவரிடம் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் செல்வராகவனுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ஜிவி பிரகாஷ், "இந்த ஸ்டுடியோவில் தான் நானும் செல்வராகவன் அவர்களும் எத்தனையோ நாட்கள் தூங்காமல் வேலை செய்தோம். அந்தப் படம் வெளியான போது பாராட்டுகளோ, விருதோ கிடைக்கவில்லை என்றாலும் இப்போது அதை ஞாபகம் வைத்துக் கொண்டு கொண்டாடுவது சந்தோஷமாக உள்ளது. அப்போது இந்த பாராட்டுக்கள் எல்லாம் கிடைத்திருந்தால் இன்னும் எனர்ஜியாக இருந்திருக்கும். உடனே 'ஆயிரத்தில் ஒருவன் 2' செய்திருப்போம்.
அந்த சமயத்தில் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தின் முதல் பாதி நீளமான ஒரு வெர்ஷன் இருந்தது. 2-ம் பாதியும் நீளமான ஒரு வெர்ஷன் இருந்தது. கிட்டதட்ட இரண்டும் சேர்ந்து 4 மணி நேர படமாக இருந்தது. அப்போது முதல் பாதி முதல் பாகமாகவும், 2-ம் பாதி 2-ம் பாகமாக வெளியிடலாமா என்று செல்வராகவன் என்னிடம் பேசினார். இறுதியில் ஒரே பாகமாக வெளியிடலாம் என்று திட்டமிட்டு வெளியிட்டோம்.
அந்தச் சமயத்தில் 2 பாகங்களாக 'ஆயிரத்தில் ஒருவன்' வெளியிட்டு இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அப்படிச் செய்திருந்தால் அடுத்ததடுத்து 3 மற்றும் 4-ம் பாகங்கள் உருவாகியிருக்கும். அது ஒரு சீரியஸாக இருந்திருக்கும். செல்வராகவனுடன் பணிபுரிந்தது ஒரு அழகான அனுபவம். அந்தப் படத்தில் நான் ஒரு அங்கமாக இருந்ததில் பெருமையாக நினைக்கிறேன்" என கூறினார்.