சினிமா
சவுரவ் கங்குலியின் வாழ்க்கை படமாகிறது
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் வாழ்க்கை படமாகிறது.
விளையாட்டு நட்சத்திரங்கள் வாழ்க்கை குறித்து சினிமா எடுப்பது வழக்கமாக உள்ளது. அதன்படி மில்கா சிங், மேரி கோம், தோனி குறித்து வெளியான படங்கள் வசூலில் சாதனை படைத்தன. சச்சின் படமும் வெளியானது. தற்போது கபில் தேவ் (கிரிக்கெட்), சாய்னா நேவல் (பாட்மின்டன்), கிரிக்கெட் வீராங்கனைகள் மிதாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி ஆகியோரது படங்களும் தயாராகி வருகின்றன.
அந்த வரிசையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து திரைப்படம் உருவாக உள்ளது. பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர் இந்த படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. கங்குலி வேடத்தில் நடிக்க ஹிருத்திக் ரோஷனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.