சினிமா
விபத்துக்குள்ளான கிரேன்

இந்தியன்-2 விபத்து வழக்கு - கிரேன் ஆபரேட்டருக்கு ஜாமீன்

Published On 2020-02-23 07:12 GMT   |   Update On 2020-02-23 07:12 GMT
இந்தியன்-2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியான வழக்கில் கிரேன் ஆபரேட்டருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது.
கமல்-ஷங்கர் கூட்டணியில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே உள்ள ஈ.வி.பி.பிலிம் சிட்டியில் இந்தியன்-2 படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. 

இதனிடையே, கடந்த புதன்கிழமை இரவு படப்பிடிப்பின் இடைவேளையின்போது மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருந்த ராட்சத கிரேன் கீழே சாய்ந்து விழுந்ததில் உதவி இயக்குனர் கிரு‌‌ஷ்ணா, கலை உதவி இயக்குனர் சந்திரன், உதவியாளர் மது ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தியது.



இந்த விபத்து தொடர்பாக, கிரேன் ஆபரேட்டர் ராஜன் மற்றும் லைக்கா தயாரிப்பு நிறுவனம், கிரேன் உரிமையாளர், தயாரிப்பு மேலாளர் உள்ளிட்ட 4 தரப்பினர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த கிரேன் ஆபரேட்டர் ராஜனை நசரத்பேட்டை போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

இந்தசம்பவம் குறித்து, நடிகர் கமல், இயக்குனர் ஷங்கர் மற்றும் காயம் அடைந்தவர்கள் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி தனித்தனியாக விசாரணை செய்ய நசரத்பேட்டை போலீசார் முடிவு செய்து இருந்தனர். இதனிடையே, இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டது. 

இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கிரேன் ஆபரேட்டர் ராஜனுக்கு அம்பத்தூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
Tags:    

Similar News