சினிமா
விஜய்

விஜய் வீட்டில் வருமான வரி சோதனை நிறைவு

Published On 2020-02-06 16:11 GMT   |   Update On 2020-02-06 16:11 GMT
நேற்று முதல் விஜய்யின் பனையூர் இல்லத்தில் நடைபெற்று வந்த வருமான வரி சோதனை நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் நடிப்பில் கடந்தாண்டு வெளியான படம் பிகில். விஜய்-அட்லி 3-வது முறையாக கூட்டணி சேர்ந்த இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், வசூலை வாரிக்குவித்ததாக திரையுலக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தரப்பில் வசூல் குறித்த எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

நேற்று திடீரென ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அதேபோல் இந்நிறுவனத்துக்கு கடன் வழங்கிய பைனான்சியர் அன்புச்செழியனின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. மேலும் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்துக்கு சென்று வருமான வரித்துறை அதிகாரிகள், 'பிகில்' பட சம்பள விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய்யிடம் விசாரணை நடத்தினர். 

பின்னர் மேற்கொண்டு விசாரணைக்காக விஜய்யை அங்கிருந்து அழைத்து சென்றனர். இதனால் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர், சென்னை சாலிகிராமம் மற்றும் பனையூரில் உள்ள விஜய்யின் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் விடியவிடிய சோதனையில் ஈடுபட்டனர். 



இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்து சோதனை நடைபெற்றது.  சினிமா தயாரிப்பாளர், பைனான்சியர், அவரது நண்பர், நடிகர் வீடு என மொத்தம் 38 இடங்களில் வருமான வரிசோதனை நடைபெற்றது. இந்த சோதனை குறித்து வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் பைனான்சியர் அன்புச்செழியனின் சென்னை மற்றும் மதுரை வீடுகளில் இருந்து கணக்கில் வராத 77 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அங்கு ரூ.300 கோடிவரை வரி ஏய்ப்பு நடந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், சென்னை பனையூரில் உள்ள விஜய் வீட்டில் நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவிடம் வாக்குமூலம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
Tags:    

Similar News