சினிமா
இளையராஜா-பிரசாத் ஸ்டூடியோ விவகாரம்.... சமரச தீர்வு மையத்துக்கு அனுப்பியது ஐகோர்ட்டு
பிரசாத் ஸ்டூடியோ விவகாரம் குறித்து இளையராஜா தொடர்ந்த வழக்கை சமரச தீர்வு மையத்துக்கு அனுப்பி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜா. இவர் 40 ஆண்டுகளுக்கு மேலாக சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் அமைந்திருக்கும் ஒரு கட்டடத்தை பயன்படுத்தி வந்தார். இந்த இடத்தில்தான் பாடல் பதிவு, இயக்குனர்கள் சந்திப்பு என அனைத்து பணிகளையும் இளையராஜா செய்து வந்தார்.
ஆனால், சில மாதங்களுக்கு முன்பு பிரசாத் ஸ்டூடியோவின் தற்போது இயக்குனராக இருக்கும் சாய் பிரசாத்துக்கும், இளையராஜாவிற்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு அந்த கட்டடம் மூடப்பட்டது.. இதன் காரணமாக இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவிற்கு செல்லாமல் இருந்தார். இளையராஜாவின் பணிகளும் முடங்கின.
இதனிடையே கடந்த 28ஆம் தேதி இளையராஜாவுக்கு ஆதராவாக திரையுலகினர் முற்றுகை போராட்டம் நடத்தி நியாயம் கேட்டனர். இதையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து தன்னை காலி செய்ய தடை கோரி இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நடந்தது. அப்போது, இந்த வழக்கை சமரச தீர்வு மையத்துக்கு அனுப்பி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.