சினிமா
படம் தயாரிக்கும் அளவுக்கு இன்னும் வளரவில்லை - யோகி பாபு
தமிழில் முன்னணி காமெடியனாக வலம் வரும் யோகி பாபு, படம் தயாரிக்கும் அளவுக்கு இன்னும் வளரவில்லை என தெரிவித்துள்ளார்.
ரஜினியுடன் 'தர்பார்', விஜய்யுடன் 'பிகில்', சிவகார்த்திகேயனுடன் 'ஹீரோ', 'நம்ம வீட்டுப் பிள்ளை', விஜய் சேதுபதியுடன் 'கடைசி விவசாயி' என யோகி பாபுவின் கால்ஷீட் டைரி நிரம்பி வழிகிறது. கதையின் நாயகனாக 'மண்டேலா' உள்ளிட்ட சில படங்களிலும் நடித்து வருகிறார். இதனிடையே 'சத்யம்' இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் உருவாகும் படத்தில் யோகி பாபு நடிக்கவுள்ளார்.
இதற்கான கதை விவாதம் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் யோகி பாபு நடிப்பது மட்டுமல்லாமல் தயாரிக்கவும் உள்ளதாகச் செய்திகள் வெளியாகின. இதனால் நடிகர்களிலிருந்து இன்னொரு தயாரிப்பாளர் என்று பலரும் அவருக்கு தொலைபேசி மூலமாக வாழ்த்து தெரிவித்தனர்.
இந்தச் செய்தி தொடர்பாக யோகி பாபுவை தொடர்பு கொண்டு கேட்ட போது, "நமக்கு எப்போதுமே நடிப்பு தான். தயாரிப்பாளராக ஆகும் அளவுக்கு இன்னும் வளரவில்லை. நிஜத்தில் நம்ம படம் தயாரிக்கணும் என்று ஒரு நாள் கூட யோசித்ததில்லை. எப்படி இப்படி ஒரு செய்தி வெளியானது என்றே தெரியவில்லை" எனக் கூறினார்.