சினிமா
அவர்கள் பாராட்டை பெறுவது சுலபமானது இல்லை - தமன்னா
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை தமன்னா, சமீபத்தில் அளித்த பேட்டியில், அவர்கள் பாராட்டை பெறுவது சுலபமானது இல்லை என்று கூறியிருக்கிறார்.
தமன்னா தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் நடித்து வருகிறார். பிரபுதேவா ஜோடியாக நடித்துள்ள தேவி-2 படம் விரைவில் திரைக்கு வருகிறது.
தமன்னா அளித்துள்ள பேட்டி வருமாறு:-
“எனது படங்கள் நன்றாக ஓடினால் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் எல்லோரும் லாபம் அடைவார்கள். அதை பார்த்து நான் சந்தோஷப்படுவேன்.
அதே மாதிரி நான் நடிக்காத படங்களும் நன்றாக ஓட வேண்டும் என்று ஆசைப்படுவேன். சினிமா துறை நன்றாக இருக்க வேண்டுமானால் எல்லா படங்களுமே ஓட வேண்டும்.
சினிமா துறை செழிப்பாக இருந்தால்தான் அனைத்து நடிகர், நடிகைகளும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். சினிமா துறையில் வெற்றிகள் ரொம்ப முக்கியம். 100 படங்கள் வெளிவந்தால் அவற்றில் 10 படங்கள் கூட வெற்றிபெறுவது இல்லை. இது வருத்தமளிக்கும் விஷயம். போட்டியில் ரசிகர்கள் பாராட்டை பெறுவதும் சுலபமானது இல்லை.
இந்த மாதிரி சூழ்நிலையில் ஒவ்வொரு படமும் வெற்றி பெறுவது முக்கியம். ஜெயித்த படத்தில் நான் இருக்கிறேனா இல்லையா என்று பார்க்க மாட்டேன். எந்த படம் வெற்றி பெற்றாலும் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். சினிமா எனது துறை. இங்கு தனியாக யாரும் வளர முடியாது. ஒரு படத்தின் வெற்றிக்கு பின்னால் நிறைய பேரின் உழைப்பு இருக்கிறது” இவ்வாறு தமன்னா கூறினார்.