சினிமா
4 மொழிகளில் வெளியாகிறது தன்ஷிகாவின் உச்சகட்டம்
பரதேசி, கபாலி படத்தில் நடித்த தன்ஷிகா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘உச்சகட்டம்’ திரைப்படம் நான்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது. #Dhansika #Uchakattam
பரதேசி, கபாலி படங்களின் மூலம் நடிக்க தெரிந்த நடிகை என்று பெயர் எடுத்தவர் தன்ஷிகா. அவர் நடிப்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாகி இருக்கும் ‘உச்சகட்டம்’ படம் வரும் 22-ந்தேதி வெளியாக இருக்கிறது.
இந்தப் படத்தை கன்னட இயக்குனர் சுதீல் குமார் தேசாய் இயக்கி உள்ளார். இவர் திரில்லர் படங்கள் எடுப்பதில் புகழ் பெற்றவர். இந்தப் படத்தில் தன்ஷிகாவுடன் இணைந்து அனூப் சிங், கபீர் சிங், ஷ்ரத்தா தாஸ், தான்யா ஹோப், ஆடுகளம் கிஷோர், வம்சி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தை டி கிரியஷேன்ஸ் சார்பில் ஆர்.தேவராஜ் தயாரித்துள்ளார். அனூப் சிங் சிங்கம் 3 படத்திலும் கபீர் சிங் வேதாளம் படத்திலும் வில்லனாக நடித்துள்ளார்கள். தான்யா ஹோப் சமீபத்தில் வெளியான தடம் படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.
திரில்லர் படமாக உருவாகியுள்ள உச்சகட்டம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது. ஒரு பெண் கால்களில் ரத்த காயங்களுடன் நடந்து வரும் காட்சியை பார்க்கும் சாய் தன்ஷிகா பயத்தில் மிரண்டு போவது போல் வெளியாகி இருந்தது. அடுத்து வெளியான டிரெய்லரில் சர்ச்சையான காட்சிகள் சில இடம்பெற்று இருந்தன. எனவே படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.