சினிமா

பேயாக களமிறங்கும் யோகி பாபு

Published On 2019-03-15 21:49 IST   |   Update On 2019-03-15 21:49:00 IST
காமெடி நடிகராகவும், முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்து வரும் யோகிபாபு, தற்போது பட்டிபுலம் படத்தில் பேயாக நடித்திருக்கிறார். #Yogibabu
காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு தற்போது முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சந்திரா மீடியா விஷன் என்ற பட நிறுவனம் சார்பாக திருமுருகன் தயாரிக்கும் ‘பட்டிபுலம்’ படத்தில் யோகி பாபு பேய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இன்னொரு நாயகனாக வீரசமர் நடிக்கிறார். கதா நாயகியாக அமிதாராவ் நடிக்கிறார். மேலும் சேரன் ராஜ், சூப்பர்குட் சுப்ரமணி ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி சுரேஷ் இயக்குகிறார். இவர் இயக்குனர் ஷக்தி சிதம்பரத்திடம் உதவியாளராக பணியாற்றியவர்.

இப்படம் பற்றி இயக்குனர் சுரேஷ் கூறும்போது, ‘நான் ஷக்தி சிதம்பரத்திடம் உதவியாளராக பணி புரிந்ததால் காமெடியை எப்படி உபயோகம் செய்தால் மக்களின் பாராட்டை பெறலாம் என்பதை கற்றுக் கொண்டேன்.



அந்த பார்முலா படி யோகி பாபுவை இந்த பட்டிபுலத்தில் பயன் படுத்திக்கொண்டேன். அஞ்சு நிமிஷம் பத்து நிமிஷம் இல்லை, படத்தில் யோகி பாபு ஒரு மணி நேரம் வருகிறார். அந்த ஒரு மணி நேரத்திற்கும் அதகளப் படுத்தி இருக்கிறார்.

கிழக்கு கடற்கரை சாலையில் பட்டிபுலம் என்ற ஊர் இருக்கு. அந்த ஊரில் உள்ள இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவதும் அதனால் என்ன பாதிப்பு ஏற்படுகிறது. ஒரு குடும்பம் எப்படி பாதிக்கப்படுகிறது என்பது தான் கதை.

இதை நகைச்சுவையாகவும் பரபரப்பாகவும் சொல்லி இருக்கிறோம். படத்தில் யோகி பாபுவுக்கு பேய் என்று பெயர் வைத்திருக்கிறோம். இப்படம் வரும் 22ம் தேதி வெளியாகிறது’ என்றார்.
Tags:    

Similar News