சினிமா

கொலை மிரட்டல் விடுப்பதாக தாடி பாலாஜி மீது மனைவி மீண்டும் புகார்

Published On 2019-02-21 05:21 GMT   |   Update On 2019-02-21 05:21 GMT
கொலை மிரட்டல் விடுப்பதாக நடிகர் தாடி பாலாஜி மீது மீண்டும் போலீஸ் நிலையத்தில் மனைவி நித்யா புகார் செய்து உள்ளார். #Balaji #Nithya
நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி. தனியார் டி.வி. நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். இவருடைய மனைவி நித்யா (வயது 31). இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். நித்யா, தன்னுடைய மகளுடன் மாதவரம் சாஸ்திரி நகரில் தனியாக வசித்து வருகிறார்.

நடிகர் பாலாஜிக்கும், நித்யாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இது தொடர்பாக இருவரும் ஏற்கனவே போலீசில் புகார் கொடுத்து இருந்தனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நித்யா, சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் கணவர் பாலாஜி மீது புகார் கொடுத்து இருந்தார்.

இதற்கிடையில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் நடந்த ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் நடிகர் தாடி பாலாஜியும், நித்யாவும் பங்கேற்றனர். அதில் பங்கேற்ற சக நடிகர்கள் உள்பட பலரும் மகளுக்காக சேர்ந்து வாழும்படி அறிவுரை கூறினர். அதை ஏற்று இருவரும் சேர்ந்து வாழ்வதாக அறிவித்தனர். அதன்பிறகு இருவரும் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர் என்று அனைவரும் நினைத்து இருந்தனர்.

இந்தநிலையில் நேற்று நித்யா, மாதவரம் போலீஸ் நிலையத்தில் தனது கணவர் தாடி பாலாஜி மீது மீண்டும் புகார் ஒன்றை அளித்தார். அதில், ‘பாலாஜி மீண்டும் குடிபோதையில் வீட்டுக்கு வந்து கலாட்டா செய்கிறார். கடந்த ஜனவரி மாதம் 21-ந்தேதி குடிபோதையில் வந்து வீட்டின் ஜன்னல் கதவுகளை உடைத்தார். செல்போனில் தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுக்கிறார்’ என்று கூறியுள்ளார்.



மேலும், ‘எங்களது விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடைபெற்றுவரும் நிலையில் குடிபோதையில் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கும் நடிகர் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’ எனவும் அந்த புகாரில் நித்யா தெரிவித்து இருந்தார்.

புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், நித்யாவிடம் அதற்கான புகார் மனு ஏற்பு ரசீது வழங்கினர். இது தொடர்பாக போலீசார், நடிகர் தாடி பாலாஜியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர்.

அப்போது அவர், வெளியூரில் சினிமா படப்பிடிப்பில் இருப்பதாகவும், 2 நாட்களில் சென்னை வந்ததும், விசாரணைக்கு வருவதாகவும் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News