சினிமா

2.0 டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை - ரசிகர்களுக்கு ரஜினி எச்சரிக்கை

Published On 2018-11-18 04:56 GMT   |   Update On 2018-11-18 04:59 GMT
சங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘2.0’ படத்தின் டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை என்று ரசிகர்களுக்கு ரஜினி எச்சரிக்கை விடுத்துள்ளார். #Rajini #2Point0
ரஜினி நடித்து சங்கர் இயக்கி உள்ள 2.0 படம் வருகிற 29-ந் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் ரசிகர் மன்ற காட்சிக்கான டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு வெளியில் விற்பனை செய்யும் மன்றத்தினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்று அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

‘ரஜினி நடித்து வெளிவரவுள்ள 2.0 திரைப்படத்தின் ரசிகர் மன்ற காட்சி தொடர்பாக கீழ்க்கானும் அறிவுறுத்தல்கள் பின்பற்றப் படவேண்டும்.

திரையரங்குகளில் ரசிகர் மன்ற காட்சி என்று பெறப்பட்ட டிக்கெட்டுகளை வெளியே விற்பனை செய்யக்கூடாது. ரசிகர்களிடம் இருந்து திரையரங்குகளில் இருக்கைக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கக் கூடாது.

இதை மீறி செயல்படும் மன்ற நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்று அதில் கூறியுள்ளார்.



ரசிகர் மன்ற காட்சி என்ற பெயரில் சில நிர்வாகிகள் 200 ரூபாய் டிக்கெட்டை, 2000, 3000 என்று விற்று வந்தனர். இதற்கு முடிவுகட்டும் வகையில் ரஜினி மன்றத் தலைமையின் அறிவிப்பு வந்துள்ளது.

விரைவில் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக அறிவித்திருக்கும் ரஜினி, தன் மீதோ தன் மன்ற நிர்வாகிகள் மீதோ எந்த புகாரும் வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்.

நேர்மையானவர்கள் மட்டுமே தன்னுடன் இருக்க வேண்டும் என்று கூறி வருகிறார். மற்ற அரசியல் வாதிகள் தன் மீது குற்றம் சாட்டிவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்.
Tags:    

Similar News