சினிமா

சண்முகராஜன் மீது கொடுத்த பாலியல் புகாரை வாபஸ் பெற்றார் நடிகை ராணி

Published On 2018-10-15 14:41 GMT   |   Update On 2018-10-15 14:41 GMT
தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சண்முகராஜன் மீது புகார் கொடுத்த ராணி, அந்த புகாரை வாபஸ் பெற்றிருக்கிறார். #Rani #Shanmugarajan
ஜெமினி, வில்லுப்பாட்டு காரன், நாட்டாமை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ராணி. தற்போது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “நந்தினி” தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக பிரபல வில்லன் நடிகர் சண்முகராஜன் நடிக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பு ராணி தனது கணவராக நடிக்கும் சண்முகராஜனை கன்னத்தில் அடிப்பது போல காட்சி எடுத்தனர். அப்போது அவரை ராணி உண்மையில் அடித்ததாக தெரிகிறது. இதனால் சண்முகராஜனுக்கும், ராணிக்கும் கடுமையான தகராறு ஏற்பட்டது. எனினும் அவர்களது படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வந்தது.

இன்று காலை செங்குன்றம் ஜி.என்.டி. சாலையில் உள்ள ஜவுளிக்கடையில் துணி எடுப்பது போன்ற காட்சிக்காக ராணியும், சண்முகராஜனும் வந்தனர். படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோதே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதனைக் கண்ட அங்கு இருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். அப்போது சண்முகராஜன் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுப்பதாக ராணி கூறி கதறி அழுதார். பின்னர் அவர் செங்குன்றம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து, தான் கொடுத்த புகாரை ராணி வாபஸ் பெற்றார். நடிகர் சண்முகராஜன் மன்னிப்பு கேட்டதால் அவர் மீதான பாலியல் புகாரை திரும்பப் பெற்றேன் என்று நடிகை ராணி கூறியிருக்கிறார். நடிகை ராணி என் மீது கூறிய பாலியல் புகார் உண்மையல்ல; எங்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடு களைந்து சமரசம் ஏற்பட்டு விட்டது என்று நடிகர் சண்முகராஜன் கூறினார்.
Tags:    

Similar News