சினிமா

ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஓவியா

Published On 2018-06-22 02:28 GMT   |   Update On 2018-06-22 02:28 GMT
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது, ஆரவை ஒருதலையாக காதலித்து வந்த ஓவியா, தற்போது, அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். #Oviya #Arav
ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் நடித்துள்ள ஆரவ்வை, ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஒரு தலையாக காதலித்தார். அவரது காதலை ஆரவ் ஏற்க மறுத்ததால் மனநலம் பாதித்தவர்போல் நடந்து கொண்டார். நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் பரபரப்பாக பேசினர். போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தவும் செய்தார்கள்.

இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாக பேசிவந்தார்கள். இந்த சம்பவத்தால் ஓவியாவை டெலிவிஷன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர். அப்போதும் ஆரவ்வை நான் காதலித்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்லி விட்டே போனார்.

அதன்பிறகு புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 4 படங்களில் அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆரவ்வும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். அவரை ஓவியா மறந்துவிட்டதாக பேசப்பட்டது. இருவரும் சந்தித்துக்கொள்ளாமலும் இருந்தனர்.



இந்த நிலையில் ஆரவ்வை கட்டிப்பிடித்து நெருக்கமாக இருக்கும் படமொன்றை ஓவியா அவரது டுவிட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார்.

இந்த படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருவரும் காதலிப்பதாகவும் அடிக்கடி ரகசியமாக சந்தித்து வருவதாகவும் பேச்சு கிளம்பி உள்ளது.
Tags:    

Similar News