ஆட்டோமொபைல்
இந்தியாவில் வால்வோ புது எலெக்ட்ரிக் கார் அறிமுகம்
வால்வோ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் எக்ஸ்சி40 எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்தது.
வால்வோ நிறுவனம் இந்திய சந்தையில் எக்ஸ்சி40 ரீசார்ஜ் எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்தது. புதிய வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் வெளியிடப்படுகிறது. அறிமுகம் செய்ததோடு, புதிய வால்வோ காருக்கான முன்பதிவு ஜூன் மாதத்தில் துவங்கும் என வால்வோ தெரிவித்து உள்ளது.
புதிய கார் வினியோகம் அக்டோபர் மாத வாக்கில் துவங்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. இந்தியாவின் பிரீமியம் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல்கள் பிரிவில் புதுவரவு மாடலாக வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் இருக்கும். தற்போது இந்த பிரிவில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் இகியூசி மாடல் மட்டுமே கிடைக்கிறது.
எனினும், வால்வோ கார் வெளியீட்டின் போது ஜாகுவார் ஐபேஸ், ஆடி இ டிரான் போன்ற மாடல்களும் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கும். அந்த வகையில் புது வால்வோ கார் மூன்று மாடல்களுக்கு போட்டியாக அமையலாம். வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் இந்தியாவில் சிபியு முறையில் கொண்டுவரப்படுகிறது.