ஆட்டோமொபைல்
எம்ஜி ஹெக்டார் பிளஸ் இந்திய வெளியீட்டு விவரம்
எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் ஹெக்டார் பிளஸ் மாடல் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது ஹெக்டார் பிளஸ் எஸ்யுவி மாடல் ஜனவரி 2021 வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து உள்ளது. மேலும் எம்ஜி மோட்டார் வாகனங்கள் விலையும் ஜனவரி மாதம் முதல் உயர்த்தப்பட இருப்பதாக அறிவித்து இருக்கிறது.
எம்ஜி ஹெக்டார், இசட்எஸ் இவி மற்றும் பிளாக்ஷிப் குளோஸ்டர் எஸ்யுவி மாடல்கள் விலை ஜனவரி 1, 2021 முதல் மூன்று சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது. மற்ற நிறுவனங்களை போன்றே எம்ஜி மோட்டார் நிறுவனமும் செலவீனங்கள் அதிகரித்து இருப்பதை விலை உயர்வுக்கு காரணமாக தெரிவித்து உள்ளது.
ஹெக்டார் பிளஸ் எஸ்யுவி மாடல் அந்நிறுவனத்தின் ஹெக்டார் பிராண்டிங்கில் புதிதாக இணைய இருக்கிறது. தற்சமயம் எம்ஜி ஹெக்டார் மாடல் ஐந்து மற்றும் ஆறு பேர் பயணிக்கக்கூடிய வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய 6 பேர் பயணிக்கக்கூடிய ஹெக்டார் பிளஸ் மாடலில் இரண்டாம் அடுக்கு இருக்கைகள் தனித்தனியே பொருத்தப்படுகின்றன.
இருக்கை மாற்றம் தவிர புதிய ஹெக்டார் பிளஸ் மாடலில் வேறு எந்த மாற்றங்களும் செய்யப்படாது என்றே தெரிகிறது. இத்துடன் எம்ஜி ஹெக்டார் பிளஸ் மாடல் ஏழு பேர் பயணிக்கும் வேரியண்ட்டும் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.