ஆட்டோமொபைல்
செப்டம்பரில் மீண்டும் கார்களின் விலையை மாற்றும் மாருதி சுசுகி
மாருதி சுசுகி நிறுவனத்தின் கார் மாடல்கள் விலை இந்தியாவில் மூன்றாவது முறையாக மாற்றப்படுகிறது.
மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் தனது வாகனங்கள் விலையை மீண்டும் உயர்த்த இருக்கிறது. விலை உயர்வு, செப்டம்பர் மாதத்தில் அமலுக்கு வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து மூன்றாவது முறையாக கார் மாடல்கள் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
ஆல்டோ முதல் விட்டாரா பிரெஸ்ஸா வரை மாருதி நிறுவனம் தற்போது விற்பனை செய்யும் அனைத்து மாடல்களின் விலையும் உயர்த்தப்படுகிறது. கடந்த ஆண்டு முதல் வாகனங்கள் உற்பத்திக்கான செலவீனங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வாகனங்கள் விலை உயர்த்தப்படுகிறது. இந்த முறை கார்களின் விலை எவ்வளவு அதிகரிக்க இருக்கிறது என இதுவரை எந்த தகவலும் இல்லை.
முன்னதாக ஜனவரி மாத வாக்கில் கார் மாடல்கள் விலை ரூ. 34 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டது. பின் ஏப்ரல் மாதத்தில் கார்களின் விலை 1.6 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டது. மாருதி சுசுகி மட்டுமின்றி பல்வேறு ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களும் வாகனங்கள் விலையை உயர்த்தி வருகின்றன.