ஆட்டோமொபைல்
விற்பனையில் புதிய உச்சம் தொட்ட டாடா எலெக்ட்ரிக் கார்
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் இவி மாடல் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் எட்டியுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது மாதாந்திர விற்பனை இதுவரை இல்லாத வகையில் 500 சதவீத வளர்ச்சியை கடந்த மாதம் பதிவு செய்தது. இந்த வளர்ச்சிக்கு டாடா நிறுவனத்தின் அனைத்து பயணிகள் கார் மாடல்களும் பங்களித்து இருக்கின்றன. இதில் டாடா நெக்சான் இவி மாடலும் ஒன்று.
தற்போது நெக்சான் இவி விற்பனையில் 4 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்து உள்ளது. இந்திய சந்தையில் அறிமுகமான 14 மாதங்களில் இந்த இலக்கை நெக்சான் இவி எட்டியுள்ளது. புதிய மைல்கல் மட்டுமின்றி மாதாந்திர விற்பனையில் நெக்சான் இவி அதிக யூனிட்களை பதிவு செய்துள்ளது.
இந்திய எலெக்ட்ரிக் கார்கள் பிரிவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 64 சதவீத பங்குகளை கொண்டுள்ளது. 2020 ஜனவரி மாத வாக்கில் நெக்சான் இவி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. குறைந்த விலை, அதிக டிரைவிங் ரேன்ஜ் போன்ற காரணங்களால் இந்த எஸ்யுவி தொடர்ந்து அதிக யூனிட்கள் விற்பனையாகி வருகிறது.
டாடா நெக்சான் இவி மாடலில் 30.2kWh லித்தியம் அயன் பேட்டரி மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது. இது 127 பிஹெச்பி பவர், 245 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 275 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.