ஆட்டோமொபைல்
வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் இந்திய வெளியீட்டு விவரம்
வால்வோ நிறுவனத்தின் எக்ஸ்சி40 ரீசார்ஜ் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
வால்வோ நிறுவனம் தனது எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது. முற்றிலும் எலெக்ட்ரிக் மாடலான எக்ஸ்சி40 ரீசார்ஜ் சர்வதேச சந்தையில் அமோக வரவேற்பு பெற்று இருக்கிறது.
அந்த வகையில் வால்வோ நிறுவனம் தனது எக்ஸ்சி40 ரீசார்ஜ் மாடலை இந்திய சந்தையில் அடுத்த ஆண்டின் ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் வால்வோ படிப்படியாக கம்பஷன் என்ஜின் வாகனங்களுக்கு மாற்றாக முற்றிலும் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் மாடல் அந்நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் மாட்யூலர் ஆர்கிடெக்ச்சர் பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. இது கம்பஷன் என்ஜின் மற்றும் பேட்டரியால் இயங்கும் வாகனங்களில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் பார்க்க ஸ்டான்டர்டு எக்ஸ்சி40 போன்றே காட்சியளிக்கிறது. இந்த காரில் இரண்டு 150 கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் 78 கிலோவாட் லித்தியம் ஐயன் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதனால் இந்த கார் 402 பிஹெச்பி பவர், 659 என்எம் டார்க் செயல்திறன் வங்கும் திறன் பெற்று இருக்கிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.9 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டிருக்கிறது.