ஆட்டோமொபைல்
டொயோட்டா வாகனங்களை வாங்காமல் பயன்படுத்தும் வசதி அறிமுகம்
டொயோட்டா நிறுவனம் தனது வாகனங்களை வாடிக்கையாளர்கள் வாங்காமலேயே பயன்படுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் கார் லீஸ் மற்றும் சந்தா முறை சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவை டொயோட்டா மொபிலிட்டி சர்வீஸ் எனும் பெயரில் செயல்படுகிறது.
டொயோட்டா மொபிலிட்டி சர்வீஸ் முதற்கட்டமாக டெல்லி, பெங்களூரு மற்றும் மும்பை போன்ற நகரங்களில் துவங்கப்பட்டு உள்ளது. அடுத்த ஒரு வருடத்திற்குள் இந்தியாவில் பத்து நகரங்களில் இந்த சேவையை நீட்டிக்க திட்டமிட்டு உள்ளதாக டொயோட்டா மொபிலிட்டி சர்வீஸ் தெரிவித்து இருக்கிறது.
புதிய திட்டம் தற்சமயம் டொயோட்டா மொபிலிட்டி சர்வீஸ் கின்டோ, ஏஎல்டி ஆட்டோமோட்டிவ் இந்தியா மற்றும் எஸ்எம்ஏஎஸ் ஆட்டோ லீசிங் இந்தியா உள்ளிட்ட பிராண்டுகளுடன் இணைந்து வழங்கப்படுகிறது.
லிசிங் சேவையை பயன்படுத்த விரும்பும் வாடிக்கையாளர்கள் அவரவர் விரும்பும் வாகனங்களை மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு குறிப்பிட்ட மாத வாடகையை செலுத்தி பயன்படுத்தலாம். மாத வாடகையில் வாகனத்தை பராமரிக்கும் கட்டணம், இன்சூரன்ஸ் மற்றும் ரோடு-சைடு அசிஸ்டண்ஸ் உள்ளிட்டவை அடங்கும்.
சந்தா முறையில் வாடிக்கையாளர்கள் 24 முதல் 48 மாதங்களுக்கு விரும்பும் காரை பயன்படுத்தலாம். கார் லீசிங் மற்றும் சந்தா முறையில் வாகனங்களை கூடுதல் பலன்களுடன் சொந்தமாக்கிக் கொள்ள முடியும்.
தற்சமயம் டொயோட்டா மொபிலிட்டி சர்வீஸ் திட்டத்தில் கிளான்சா, யாரிஸ், இன்னோவா க்ரிஸ்டா, ஃபார்ச்சூனர் மற்றும் விரைவில் அறிமுகமாக இருக்கும் அர்பன் குரூயிசர் போன்ற மாடல்களை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.