ஆட்டோமொபைல்
மீண்டும் உற்பத்தியை துவங்கிய ஹூண்டாய்
ஹூண்டாய் நிறுவனம் தனது சென்னை ஆலையில் பணிகளை மீண்டும் துவங்கியுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
ஹூண்டாய் நிறுவனம் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது ஆலையில் உற்பத்தி பணிகளை மீண்டும் துவங்கியது. முதல் நாளில் இந்நிறுவனம் மொத்தம் 200 கார்களை உற்பத்தி செய்திருக்கிறது.
கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்த ஆலையில் நடைபெற்று வந்த பணிகள் மார்ச் 23 ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், உற்பத்தி பணிகளை ஹூண்டாய் மீண்டும் துவங்கியுள்ளது. அதன்படி முதல் நாளில் மட்டும் 200 கார்கள் உற்பத்தி செய்யப்பட்டதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது.
மாநில மற்றும் மத்திய அரசுகள் வெளியிட்ட வழிமுறைகளின்படி ஆலை பணிகளின் போது சமூக இடைவெளி 100 சதவீதம் பின்பற்றப்பட்டதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது. உற்பத்தி பணிகள் மீண்டும் துவங்கி இருப்பதால், ஹூண்டாய் நிறுவனம் இந்த மாதத்தில் மட்டும் சுமார் 12 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரம் யூனிட்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.
முன்னதாக ஹூண்டாய் நிறுவனம் நாடு முழுக்க 255 விற்பனையகங்களில் பணிகளை மீண்டும் துவங்கியது. இதுதவிர இரண்டே நாட்களில் 170 யூனிட்களை ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.