ஆட்டோமொபைல்
வால்வோ இந்தியா வாகனங்களுக்கு வாரண்டி சலுகை நீட்டிப்பு
வால்வோ இந்தியா நிறுவனம் தனது வாகனங்களுக்கான வாரண்டியை நீட்டிப்பதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் நோய் தொற்று உலகம் முழுக்க பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக ஆட்டோ துறையும் கடுமையாக பாதித்து இருக்கிறது. பெரும்பாலான ஆட்டோ நிறுவன விற்பனையகங்கள் நிரந்தரமாக மூடும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. எனினும், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தன்பங்கிற்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
வால்வோ கார் இந்தியா நிறுவனம் தனது கார்களுக்கு வழங்கப்பட்டு இருந்த வாரண்டியை மே 31 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால், வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க வாரண்டி நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாரண்டி நீட்டிப்பு சலுகை மார்ச் 22 ஆம் தேதி துவங்கி மே 3 ஆம் தேதி வரை வாரண்டி நிறைவு பெறும் வாகனங்களுக்கு பொருந்தும் என வால்வோ இந்தியா தெரிவித்து இருக்கிறது.
"வாடிக்கையாளர்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு மட்டுமே எங்களின் மிகமுக்கிய குறிக்கோள் ஆகும். கொரோனா வைரஸ் பாதிப்பு பராமல் தடுக்கும் நோக்கில் மத்திய அரசு அறிவித்து இருக்கும் ஊரடங்கு உத்தரவிற்கு முழு ஆதரவு அளிக்கிறோம். இந்த காலக்கட்டத்தில் வாரண்டியில் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு உதவும் நோக்கில் வாரண்டியை மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கிறோம்" என வால்வோ கார் இந்தியா நிறுவன நிர்வாக இயக்குனர் சார்லஸ் ஃபிரம்ப் தெரிவித்து இருக்கிறார்.