ஆட்டோமொபைல்
மாருதி சுசுகி கார் மாடல்களின் விலையில் விரைவில் மாற்றம்
மாருதி சுசுகி நிறுவனம் தனது கார் மாடல்களின் விலையை விரைவில் மாற்றம் செய்ய இருக்கிறது. முழு விவரங்களை பார்ப்போம்.
மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் தனது கார் மாடல்களின் விலையை ஜனவரி 1, 2020 முதல் உயர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் செலவீனங்கள் உயர்ந்து இருப்பதால் கார் மாடல்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக மாருதி சுசுகி நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விலை மாருதி நிறுவன கார்களின் மாடல்களுக்கு ஏற்ப வேறுபடும். விலை உயர்வு மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், எத்தனை சதவீதம் விலை உயர்த்தப்படுகிறது என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
முன்னதாக இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலும் மாருதி சுசுகி நிறுவன வாகனங்களின் விலை உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டு விலை உயர்வுக்கு பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக கூறப்பட்டது. ஒவ்வொரு ஆண்டு துவக்கத்திலும் வாகன விலை உயர்வு ஆட்டோமொபைல் சந்தையில் வாடிக்கையான ஒன்றாக மாறிவருகிறது.
தற்சமயம் மாருதி சுசுகி இந்தியாவின் வாகனங்கள் விலை ஆல்டோ மாடல் ரூ. 2.88 லட்சத்தில் துவங்குகிறது. இந்நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் மாடலான எக்ஸ்.எல்.6 விலை ரூ. 9.79 லட்சத்தில் துவங்கி 11.46 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.