இருசக்கர வாகனங்கள் விலையை மாற்றும் ஹீரோ மோட்டோகார்ப்!
- ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது இருசக்கர வாகனங்கள் விலையை மாற்றுவதாக அறிவித்து இருக்கிறது.
- ஹீரோ வாகனங்கள் விலை குறிப்பிட்ட தேதியில் இருந்து மாற்றப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் மாடல்கள் விலை டிசம்பர் 1 ஆம் தேதி முதல் உயர்த்தப்படும் என அறிவித்து இருக்கிறது. அதிகபட்சமாக இருசக்கர வாகனங்கள் விலை ரூ. 1500 வரை உயர்த்தப்படும் என்று ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்துள்ளது. விலை உயர்வு ஒவ்வொரு மாடல் மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப வேறுபடும்.
"உற்பத்தி மற்றும் உதிரி பாகங்களுக்கான செலவீனங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது. விலை உயர்வு வாடிக்கையாளர்களை பாதிக்காத வகையில், அவர்களுக்கு நிதி சலுகை மூலம் தீர்வுகளை வழங்குவோம்," என ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன மூத்த நிதி அலுவலர் நிரஞ்சன் குப்தா தெரிவித்து இருக்கிறார்.
விலை உயர்வு தவிர ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விரைவில் எக்ஸ்பல்ஸ் 200டி 4வி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. ஏற்கனவே இந்த மாடலுக்கான டீசர்கள் வெளியிடப்பட்டு விட்டன. எனினும், இதற்கான வெளியீட்டு தேதி மட்டும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. தற்போதைய விலை உயர்வை தொடர்ந்து அடுத்த மாத வாக்கில் இந்த மாடல் வெளியீடு நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.