ஆட்டோமொபைல்
ஏப்ரலில் சுமார் 32,000-க்கும் அதிக யூனிட்களை ஏற்றுமதி செய்த பஜாஜ் ஆட்டோ
இந்திய மோட்டார்சைக்கிள் உற்பத்தியாளரான பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கடந்த மாதம் சுமார் 32,000-க்கும் அதிக யூனிட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஏப்ரல் மாத விற்பனை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் கடந்த மாதம் உள்நாட்டில் பஜாஜ் ஆட்டோ ஒரு வாகனத்தையும் விற்பனை செய்யவில்லை. கொரோனா ஊரடங்கு காரணமாக விற்பனை முழுமையாக பாதித்து இருக்கிறது.
கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுக்க அனைத்து பணிகள் மற்றும் வியாபாரங்கள் முழுமையாக மூடப்பட்டன. இதில் வாகன உற்பத்தி, விற்பனை, சர்வீஸ் மற்றும் ஏற்றுமதி உள்ளிட்ட பணிகளும் அடங்கும். ஏப்ரல் மாத இறுதியில் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதன் காரணமாக நிறுவனங்கள் படிப்படியாக பணிகளை மீண்டும் துவங்கியுள்ளன.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கடந்த மாதம் 32,009 யூனிட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இவை ஊரடங்கு துவங்கும் முன் உற்பத்தி செய்யப்பட்டவை என பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது. எனினும், உள்நாட்டில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஒரு வாகனத்தையும் விற்பனை செய்யவில்லை.