ஆட்டோமொபைல்
இனி அமேசான் பொருட்கள் இந்த வாகனத்தில் தான் டெலிவரி செய்யப்படும்
அமேசான் இந்தியா நிறுவனம் தனது தளத்தில் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யப்படும் பொருட்களை இந்த வாகனத்தில் விநியோகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.
அமேசான் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் பெசோஸ் சமீபத்தில் இந்திய சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். இந்திய பயணத்தின் போது இங்கு பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்து இருந்தார்.
இத்துடன் நாட்டில் அமேசான் தளத்தில் முன்பதிவு செய்யப்படும் பொருட்களை எலெக்ட்ரிக் வாகனங்களில் டெலிவரி செய்ய திட்டமிடப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார். இதற்கென அமேசான் நிறுவனம் 10,000 எலெக்ட்ரிக் ரிக்ஷாக்களை பயன்படுத்த இருக்கிறது.
முன்னதாக 2019 ஆண்டு ஆட்டோ ரிக்ஷா கொண்டு பொருட்களை விநியோகம் செய்வதற்கான சோதனைகளை அமேசான் செய்திருந்தது. இதன் தொடர்ச்சியாக அமேசான் நிறுவனம் 2025 ஆண்டு வாக்கில் இந்தியா முழுக்க சுமார் 20 நகரங்களில் ஆட்டோ ரிக்ஷாக்கள் மூலம் பொருட்களை விநியோகம் செய்ய இருக்கிறது.
2019 செப்டம்பரில் அமேசான் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் திட்டத்தை #climatepledge அறிவித்தது. இந்த திட்டத்தின் கீழ் 2040 ஆண்டிற்குள் கார்பன் நியூட்ரல் இலக்கை அடைய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
“21-ம் நூற்றாண்டு இந்தியாவுக்கான நூற்றாண்டாக இருக்க போகிறது.” என அமேசான் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் பெசோஸ் தெரிவித்தார். இத்துடன் 2025 ஆண்டிற்குள் இந்திய ஏற்றுமதி மதிப்பை 1000 கோடி அமெரிக்க டாலர்களுக்கான சந்தையாக உருவாக்க அமேசான் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.