ஆட்டோ டிப்ஸ்
அடுத்த அதிரடிக்கு தயாரான ஏத்தர் எனர்ஜி - விரைவில் அதிக ரேன்ஜ் கொண்ட புது மாடல் அறிமுகம்
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகம் செய்வது பற்றி அசத்தல் அப்டேட் கொடுத்துள்ளது.
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் விரைவில் இரண்டு புது எலெக்ட்ரிக் ஸகூட்டர் வேரியண்ட்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இரண்டு புது வேரியண்ட்களில் ஒரு மாடலில் பெரிய பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. பெரிய பேட்டரி கொண்ட மாடல் நிச்சயம் அதிக ரேன்ஜ் வழங்கும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.
புதிதாக இரண்டு வேரியண்ட்களை அறிமுகம் செய்வது பற்றி ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தருன் மேத்தா தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருந்தார். மேலும் இரண்டு புது வேரியண்ட்களும் ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் தற்போதைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிளாட்பார்மிலேயே உருவாக்கப்பட்டு இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்திய சந்தையில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ஏத்தர் 450X மற்றும் ஏத்தர் 450 பிளஸ் என இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இரு மாடல்களில் ஏத்தர் 450X பிரீமியம் வேரியண்ட் ஆகும். இவற்றை தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட இருக்கும் இரண்டு புது வேரியண்ட்கள் அம்சங்கள் மற்றும் விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.