ஆட்டோ டிப்ஸ்
மத்திய அரசு எச்சரிக்கை - உடனடி பதில் அளித்த ஓலா எலெக்ட்ரிக் சி.இ.ஓ.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால், மத்திய அரசின் சமீபத்திய எச்சரிக்கைக்கு பதில் அளித்து இருக்கிறார்.
இந்தியாவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி வெடித்து சிதறும் சம்பவங்கள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் பெரும் சிக்கலில் சிக்கித் தவிக்கின்றன.
இந்த நிலையில், தான் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் அலட்சியம் காட்டும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்து இருந்தது. இதோடு பிழை இருக்கும் பட்சத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களை உடனடியாக ரி-கால் செய்து அவற்றை சரி செய்யவும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தி இருந்தது.
மத்திய அரசு எச்சரிக்கைக்கு ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் பதில் அளித்துள்ளார். அதன்படி, "எலெக்ட்ரிக் அல்லது கசோலின் என எந்த வாகனத்தை எடுத்துக் கொண்டாலும், அவற்றில் பிரச்சினை ஏற்படுவது மிகவும் சாதாரண விஷயம் தான். பிரச்சினை எதுவும் இல்லை என நான் கூற மாட்டேன், பெரும்பாலான பிரச்சினைகள் மென்பொருள் சார்ந்தது என்பதால் எங்களால் அதனை மிகவும் சிறப்பாக சரி செய்ய முடியும்." என அவர் தெரிவித்தார்.
முன்னதாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் 1441 எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களை ரி-கால் செய்வதாக அறிவித்து இருந்தது. எலெக்ட்ரிக் வாகனங்கள் அடிக்கடி தீப்பிடித்து எரிவதை அடுத்து ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்த நடவடிக்கையை அதரடியாக எடுத்து உள்ளது. "முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்கூட்டர்களின் மீது முழுமையான ஆய்வு செய்து, உதிரி பாகங்கள் எந்த நிலையில் இருக்கின்றன என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள இருக்கிறோம். இதன் காரணமாக 1441 வாகனங்களை ரி-கால் செய்கிறோம்," என ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்து இருந்தது.