ஆட்டோ டிப்ஸ்
ஒவ்வொரு உயிரும் முக்கியம் - எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்களை எச்சரிக்கும் மத்திய மந்திரி
இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களான ஒகினவா, பியூர் EV போன்ற நிறுவன மாடல்களும் வெடித்து சிதறின. இதன் காரணமாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் எழுந்துள்ளது.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் அடிக்கடி வெடித்து சிதறும் சம்பவங்கள் அதிகரித்து வருவதை அடுத்து, எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்கள், வாகன உற்பத்தியில் அலட்சியம் காட்டும் பட்சத்தில் கடும் அபராதங்களை விதிக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது.
இதே சமயம் நிறுவனங்கள், பிரச்சினை ஏற்பட்டுள்ள வாகனங்களை விரைந்து ரீ-கால் செய்து அவற்றை சரி செய்து கொடுக்க வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்கரி தெரிவித்து இருக்கிறார். நாட்டின் ஒவ்வொரு பயணியின் பாதுகாப்பும் அரசாங்கத்திற்கு மிக முக்கியமான ஒன்று என அவர் மேலும் தெரிவித்தார்.
"கடந்த இரண்டு மாதங்களில் பல்வேறு எலெக்ட்ரிக் வாகன விபத்து சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. ஏதேனும் நிறுவனங்கள் தங்களின் செயல்பாடுகளில் அலட்சியம் காட்டுவது கண்டுபிடிக்கப்பட்டால், கடுமையான அபராதம் விதிக்கப்படும். மேலும் பிரச்சினை ஏற்பட்டுள்ள வாகனங்கள் உடனடியாக ரீ-கால் செய்யப்பட உத்தரவிடப்படும்," என நிதின் கட்கரி தெரிவித்து இருக்கிறார்.
சமீப காலங்களில் பல்வேறு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் வெடித்து சிதறும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. முன்னதாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவன ஸ்கூட்டர் மாடல் வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுதியது. இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களான ஒகினவா, பியூர் EV போன்ற நிறுவன மாடல்களும் வெடித்து சிதறின. இதன் காரணமாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் எழுந்துள்ளது.