ஆட்டோ டிப்ஸ்
சிம்பில் எனர்ஜி புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீட்டு விவரங்கள்
சிம்பில் எனர்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஒன்றை விரைவில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
சிம்பில் எனர்ஜி நிறுவனம் கடந்த ஆண்டு தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. சிம்பில் எனர்ஜி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை விரைவில் துவங்க இருக்கிறது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சிம்பில் எனர்ஜி நிறுவனம் புதிய எலெர்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த தகவலை சிம்பில் எனர்ஜி நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான சுஹாஸ் ராஜ்குமார் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின் போது தெரிவித்தார். ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கான உற்பத்தி சோதனை ஏற்கனவே துவங்கி விட்டது. வினியோகம் இந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் துவங்க இருக்கிறது.
சிம்பில் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவரி துவங்கும் போதே, இரண்டாவது வாகனமும் அறிமுகம் செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்து இருக்கிறார். "முதல் மாடலை தொடர்ந்து எங்களின் இரண்டாவது வாகனம் இந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும். இது குறைந்த விலையில் கிடைக்கும் மாடலாக இருக்கும்," என அவர் தெரிவித்தார்.
ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கும் மாடல் முற்றிலும் புதியதாக இருக்கும். இது புதிய பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கும். இதில் சிறிய பேட்டரி மற்றும் மோட்டார் வழங்கப்படும். எனினும், இவை தவிர புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றி வேறு எந்த தகவலையும் அவர் வெளியிடவில்லை. இந்த மாடலின் விலை போட்டி நிறுவனங்களுக்கு கடும் சவாலை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.