ஆட்டோமொபைல்
எலெக்ட்ரிக் வாகன வெளியீட்டுக்கு தயாராகும் யமஹா
இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் களமிறங்குவதற்கான முதற்கட்ட பணிகளை யமஹா துவங்கி இருக்கிறது.
ஜப்பான் நாட்டு இருசக்கர வாகன உற்பத்தியாளரான யமஹா இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களை வெளியிடுவதற்கான பணிகளை துவங்கி இருக்கிறது. தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வதற்கான உள்கட்டமைப்பு, பேட்டரி உற்பத்தி, விலை போன்ற விஷயங்களை ஆய்வு செய்து வருகிறது.
எலெக்ட்ரிக் வாகனங்களின் வெற்றி பயனர்கள் இவற்றை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் போது மட்டுமே கிடைக்கும் என யமஹா தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை ஏற்றுக் கொள்ள போதுமான சார்ஜிங் கட்டமைப்பு, சீரான பேட்டரி உற்பத்தி போன்ற வசதிகள் இருக்க வேண்டும்.
மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் எலெக்ட்ரிக் வாகன விற்பனையை ஊக்கப்படுத்த மேற்கொள்ளும் நடவடிக்கைகளை யமஹா மோட்டார் இந்தியா வரவேற்பதாக அந்நிறுவன தலைவர் மோடோபுமி ஷித்தாரா தெரிவித்தார். இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் மற்றும் பெட்ரோல் வாகனங்களுக்கான இடைவெளியை ஹைப்ரிட் தொழில்நுட்பம் மூலம் பூர்த்தி செய்ய திட்டமிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.