ஆட்டோமொபைல்
விரைவில் ஆர்.டி.ஓ. அலுவலகம் செல்லாமல் ஓட்டுனர் உரிமம் பெறலாம்
இந்தியாவில் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு புதிய விதிமுறைகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இந்தியாவில் பல்வேறு காரணங்களால் சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இது இந்திய சாலை போக்குவரத்து துறையில் பெரும் பிரச்சினையாக உள்ளது. விபத்துகளை குறைக்க திறமையான டிரைவர்களை உருவாக்க அங்கீகாரம் பெற்ற ஓட்டுனர் பயிற்சி மையங்களை நாடு முழுக்க உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இந்த பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் டிரைவர்கள் ஓட்டுனர் உரிமத்துக்காக ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் வாகனங்களை இயக்கி காண்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த பயிற்சி மையங்களுக்கான விதிமுறைகளை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டு இருக்கிறது. புதிய விதிமுறைகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.
அதன்படி இந்த பயிற்சி மையங்களில் உயர்தர பயிற்சியை உறுதி செய்வதற்காக சிமுலேட்டர்கள், பிரத்யேக ஓட்டுனர் பயிற்சி தடங்கள் இருக்க வேண்டும். மோட்டார் வாகன சட்டம் 1988 மற்றும் மேம்பட்ட பாடப்பிரிவுகள் இந்த மையங்களில் கற்பிக்கப்பட இருக்கின்றன.
இந்த மையங்களில் வெற்றிகரமாக பயிற்சியை முடிப்பவர்கள், ஓட்டுனர் உரிமம் பெற ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் வாகனங்களை இயக்க வேண்டிய அவசிம் இல்லை. இதன் மூலம் உரிமம் பெறுவதற்கான வழிமுறைகள் எளிதாகும். இந்த மையங்கள் தொழில் சார்ந்த சிறப்பு பயிற்சியையும் வழங்க அனுமதிக்கப்படுகிறது.