ஆட்டோமொபைல்
தமிழக அரசுக்கு ரூ. 2 கோடி வழங்கிய ராயல் என்பீல்டு
இருசக்கர வாகன உற்பத்தியாளான ராயல் என்பீல்டு நிறுவனம் தமிழக அரசுக்கு கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிதி உதவி வழங்கி இருக்கிறது.
தமிழகத்தில் கொரோனாவைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள ராயல் என்பீல்டு நிறுவனம் ரூ. 2 கோடி நிதி உதவி வழங்கி இருக்கிறது. இந்த தொகை மாநிலத்தின் சுகாதார துறை சார்ந்த பணிகளை மேம்படுத்த செலவிடப்பட இருக்கிறது.
ராயல் என்பீல்டு சார்பாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வினோத் கே தசாரி ரூ. 2 கோடிக்கான காசோலையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கினார். ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மூன்று உற்பத்தி ஆலைகள் திருவொற்றியூர், ஒரகடம் மற்றும் வல்லம் வடகால் ஆகிய பகுதிகளில் இயங்கி வருகிறது.
ஈச்சர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் ராயல் என்பீல்டு தமிழ் நாட்டின் சூழல் அறிந்து தொடர்ந்து உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்து உள்ளது. கொரோனாவைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ராயல் என்பீல்டு கொடுத்திருக்கும் தொகையை கொண்டு ஆக்சிஜன் கான்சென்டிரேட்டர்கள், பிபிஇ கிட் போன்ற மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட இருக்கின்றன. இத்துடன் இந்த தொகையை மற்ற செலவீனங்களுக்கும் பயன்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.