ஆட்டோமொபைல்
பாதிப்பு அபாயம் காரணமாக ஹூண்டாய் எடுத்த திடீர் முடிவு
சென்னையில் இயங்கி வரும் உற்பத்தி ஆலை பணிகளை நிறுத்தும் நிலைக்கு ஹூண்டாய் தள்ளப்பட்டு இருக்கிறது.
ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் தனது சென்னை ஆலை பணிகளை ஐந்து நாட்களுக்கு நிறுத்தி இருக்கிறது. கொரோனாவைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் ஹூண்டாய் நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
கொரோனாவைரஸ் தொற்றின் இரண்டாவது அலை மற்றும் தமிழகத்தில் அமலாகி இருக்கும் கடுமையான ஊரடங்கு விதிமுறைகள் காரணமாக ஆலை பணிகள் நிறுத்தப்படுவதாக ஹூண்டாய் தெரிவித்து இருக்கிறது. கடந்த வாரம் தமிழகத்தில் ஊரடங்கை ஒரு வாரத்திற்கு நீட்டிப்பதாக அரசு உத்தரவிட்டது.
ஊரடங்கு காலக்கட்டத்திலும் தொடர்ந்து செயல்பட ஆட்டோமொபைல் உள்பட சில துறை சார்ந்த நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கிறது.
தமிழகத்தில் தற்போது நிலவி வரும் சூழலை புரிந்து கொண்டு ஹூண்டாய் நிர்வாகம், ஆலை பணிகளை மே 25 ஆம் தேதி துவங்கி மே 29 ஆம் தேதி வரை நிறுத்த முடிவு செய்துள்ளது என அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.