ஆட்டோமொபைல்
கார் மாடல்கள் விலையில் மாற்றம் செய்த டாடா மோட்டார்ஸ்
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அனைத்து கார் மாடல்கள் விலையையும் உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை 1.8 சதவீதம் உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வு ஏற்கனவே அமலாகி விட்டது. ஒவ்வொரு மாடல் மற்றும் வேரியண்டின் புது விலை விவரங்களை விரைவில் டாடா மோட்டார்ஸ் அறிவிக்க
இருக்கிறது.
கடந்த சில நாட்களாக பல்வேறு ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களும் தங்களது வாகனங்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் இணைந்துள்ளது. முன்னதாக மாருதி சுசுகி, ஹூண்டாய், டொயோட்டா, போர்டு, பிஎம்டபிள்யூ, எம்ஜி மோட்டார்ஸ் மற்றும் வால்வோ உள்ளிட்ட நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்தன.
உதிரிபாகங்கள் விலை உயர்வு, ஒட்டுமொத்த உற்பத்தியை சார்ந்த மூல பொருட்கள் விலை உயர்வு காரணமாக இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டு இருப்பதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன வியாபார பிரிவு தலைவர் சைலேஷ் சந்திரா தெரிவித்து இருக்கிறார். மே 7 மற்றும் அதற்கும் முன் புது டாடா கார் வாங்க முன்பதிவு செய்தவர்களுக்கு பழைய விலையே பொருந்தும்.