ஆட்டோமொபைல்
தமிழகத்தில் உருவாகும் ஆம்பியர் எலெக்ட்ரிக் உற்பத்தி ஆலை
ஆம்பியர் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய உற்பத்தி ஆலை தமிழகத்தில் உருவாகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஆம்பியர் எலெக்ட்ரிக் நிறுவனம் உலகத் தரம் மிக்க உற்பத்தி ஆலையை உருவாக்க ரூ. 700 கோடியை முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. இந்த நிறுவனம் தனது உற்பத்தி ஆலையை தமிழகத்தில் உள்ள ராணிபேட்டையில் கட்டமைக்க இருக்கிறது.
புதிய உற்பத்தி ஆலை தொடர்பாக ஆம்பியர் எலெக்ட்ரிக் மற்றும் தமிழ் நாடு அரசு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. புதிய ஆலை இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் செயல்பாட்டுக்கு வரும் என ஆம்பியர் எலெக்ட்ரிக் தெரிவித்து உள்ளது.
14 லட்சம் சதுர அடி பரப்பளவு நிலத்தில் இந்த உற்பத்தி ஆலை கட்டமைக்கப்படுகிறது. இது இந்தியாவில் மிகப்பெரும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி ஆலை ஆகும். முதற்கட்டமாக இந்த ஆலையில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன.
எதிர்காலத்தில் இதே ஆலையில் ஒவ்வொரு ஆண்டும் பத்து லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யவும் முடியும். இந்த ஆலையில் மேம்பட்ட ஆட்டோமேஷன் வழிமுறை பின்பற்றப்பட இருக்கிறது.