ஆட்டோமொபைல்
வாகன பராமரிப்பு

வாகனங்களில் இதுபோல் செயலிழந்தால் இழப்பீடு பெற முடியுமா?

Published On 2020-11-02 16:35 IST   |   Update On 2020-11-02 16:35:00 IST
மக்கள் பயன்படுத்தும் வாகனங்கள் இதுபோன்று செயலிழந்து போனால் காப்பீடு திட்டத்தில் இழப்பீடு கோர முடியுமா என்பதை தொடர்ந்து பார்ப்போம்.


கடந்த காலங்களில் மழையால் தமிழகத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கின. மக்களின் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமான கார், மோட்டார்சைக்கிள்களும் மழையில் செயலிழந்தன. வாகனம் வாங்கும்போதே பதிவு செய்வதோடு, காப்பீடும் செய்து தருகின்றனர். 

வாகனங்களுக்கு பொதுவாக ஒருங்கிணைந்த காப்பீடு என்றொரு காப்பீட்டு திட்டமும், 3-ம் நபர் காப்பீடு என்றொரு காப்பீட்டு திட்டமும் உண்டு. பொதுவாக 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் வாகனங்களின் உரிமையாளர்கள் 3-ம் நபர் காப்பீட்டை தேர்வு செய்வர். அத்தகையோர் மழை, வெள்ள சேதத்துக்கு இழப்பீடு கோர முடியாது. ஒருங்கிணைந்த காப்பீட்டு திட்டத்தை வைத்திருப்பவர்கள் இழப்பீடு கோரலாம்.



மழை நீர், வெள்ள நீர் புகுந்து பாதிப்புக்குள்ளான கார், மோட்டார்சைக்கிள்களுக்கு இழப்பீடு கோரலாம். வீட்டுக்கு வெளியே நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்கள், கார் ஆகியவற்றின் என்ஜின் பாதிக்கப்பட்டால் இழப்பீடு கோரலாம். 

ஆறுகளைக் கடக்கும்போது கார் அல்லது மோட்டார்சைக்கிள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருந்தால், பாலங்கள் மீது செல்லும்போது பாலம் திடீரென உடைந்து வாகனம் அடித்துச் செல்லப்பட்டிருந்தால், மழையில் மரங்கள், மின் கம்பங்கள் மற்றும் விளம்பர பலகைகள் வாகனங்கள் மீது விழுந்து சேதம் ஏற்பட்டிருந்தால் இழப்பீடு கோரலாம். 

தற்போது வரும் வாகனங்களில் அதிநவீன, மின் சென்சார் கருவிகள் உள்ளிட்டவை அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் வாகனங்கள் மழை, வெள்ள நீரில் சிக்கிஇருந்தால் அதை மீட்டு விரைவாக இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இழப்பீடு கோரிக்கையை வைக்க வேண்டும். 

காலம் கடந்து இழப்பீடு கோரிக்கை வைக்கும்போது அதை பெரும்பாலும் காப்பீட்டு நிறுவனங்கள் அனுமதிப்பதில்லை. அல்லது உரிய நிவாரணம் கிடைக்காமல் போவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

Similar News