ஆட்டோமொபைல்
வாகன சரிபார்ப்பு

ஒரே இடத்தில் முடங்கிய வாகனங்களை பராமரிக்க எளிய வழிகள்

Published On 2020-05-02 11:15 GMT   |   Update On 2020-05-02 11:15 GMT
கொரோனா ஊரடங்கு காரணமாக ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் வாகனங்களை பராமரிக்க எளிய வழிகளை தொடர்ந்து பார்ப்போம்.



ஊரடங்கினால் 35 நாட்களுக்கும் மேலாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

இருசக்கர வாகனங்கள் தொடங்கி கனரக வாகனங்கள் வரை 80 சதவீத வாகனங்கள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இருப்பிடத்தை விட்டு நகரவில்லை. பெரும்பாலான வாகனங்கள் தொடர்ந்து ஓடாமல் இருப்பதால் பழுது ஏற்படுமோ என வாகன உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

எந்த ஒரு வாகனமும் தொடர்ந்து இயங்கிக்கொண்டு இருக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை பராமரிக்கவும் வேண்டும். அப்போது தான் வாகனங்களில் பழுது ஏற்படாது. ஆனால் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பெரும்பாலான வாகனங்கள் (இருசக்க வாகனங்கள், கார், லாரி, வேன் உள்பட) 35 நாட்களுக்கும் மேலாக நின்ற இடத்திலேயே இருக்கின்றன.

ஒரே இடத்தில் நீண்டநாளாக நிறுத்தி வைத்துள்ள வாகனத்தில் எலி, பாம்பு போன்ற உயிரினங்கள் நிரந்தரமாக வசிக்க தொடங்கும். அப்போது அவை வண்டியில் இருக்கும் ஒயர்கள், சிறிய உலோக குழாய்களை சேதப்படுத்திவிடும். இதனால் திடீரென வாகனத்தை இயக்குவதில் சிக்கல் ஏற்படும்.



என்ஜின் ஆயில், பெட்ரோல்-டீசல் போன்றவை உறைந்து போகும். இதனாலும் வாகனத்தின் முக்கியமான பாகங்கள் சேதமடையும். சிறு சிறு குழாய்களில் ஆயில் தேங்கி நின்று அடைப்புகளை ஏற்படுத்தும். பல நாட்களாக ஒரே இடத்தில் நிற்கும் வாகனத்தின் டயர்கள் வெடிக்கும் அபாயம் உண்டு. 

குறைந்தபட்சமாக டயர்களில் இருக்கும் காற்று வெளியேறிவிடும். வாகனங்களை நீண்டநாள் இயக்கவில்லை என்றால் பேட்டரி காலியாகிவிடும். இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து விடுபட வேண்டும் என்றால் தினமும் வீட்டில் இருக்கும் இருசக்கர வாகனத்தையோ, கார், லாரி, வேன் போன்ற கனரக வாகனங்களையோ ஸ்டார்ட் செய்து சிறிது நேரம் என்ஜினை இயக்க வேண்டும்.

பின் வண்டி நிற்கும் இடத்தில் இருந்து சிறிது தூரம் நகர்த்த வேண்டும். அதாவது வண்டி நின்ற இடத்தில் இருந்து குறைந்தபட்சம் 5 அடி தூரமாவது நகர்த்திவிட்டு பின், மீண்டும் இருந்த இடத்திற்கு கொண்டு வந்து நிறுத்திவிடலாம். இவ்வாறு செய்வதால் பெட்ரோல்-டீசல் உறையாது. 

ஆயில் தன் நிலையில் இருந்து மாறாது. பேட்டரி சார்ஜ் ஆகிக் கொள்ளும். டயர்கள் வீக்கம் அடைந்து வெடிக்கும் நிலையை அடையாது. மொத்தத்தில் வண்டி எப்போதும் தொடர்ச்சியான இயக்கத்துக்கு தயாராக இருக்கும்.
Tags:    

Similar News